சின்னதிரை நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக இந்த ஆண்டே புதிய கட்டடம் கட்ட சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சின்னதிரை நடிகர் சங்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் என்பதால் 500க்கும் மேற்பட்ட சின்னதிரை நடிகர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், அண்மையில் நடைபெற்ற சின்னதிரை நடிகர் சங்கம் தேர்தலில் வெற்றி பெற்ற சிவன் சீனிவாசன் தலைமையிலான அணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று சாலிகிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
அப்போது, சின்னதிரை நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக இந்த ஆண்டே சொந்த கட்டிடம் கட்டுவதற்கான தீர்மானம், சின்னதிரையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், சின்னதிரை தான் சினிமா தொழிலாளர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. சின்னதிரையில் படப்பிடிப்பு அனைத்தும் தற்போது நிறைவாக நடைபெற்று வருவதால் தான் சினிமா தொழிலாளர்கள் வறுமையின்றி இருக்கிறார்கள். வெற்றி பெற்ற சிவன் ஸ்ரீனிவாசன் தலைமையிலான அணியினர் ஒன்றுபட்டுச் செயல்பட்டால் சின்னதிரை நடிகர் சங்கம் மேலும் மேலும் உயரும் எனக் கூறினார்.








