கூடலூர்- மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் பச்சை பசேல் என காட்சியாக்கும் புல்வெளியில் உலா வந்த சிறுத்தையை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டு ரசித்தனர்..
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் மற்றும் அரியவகை பறவை இனங்களின் வசிப்பிடமாக உள்ளது.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் முதுமலை புலிகள் காப்பகத்தின் நடுவே அமைந்துள்ள கூடலூர் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே உலா வருவதும் சாலையை கடந்து செல்வதும் வழக்கம். அதேபோல் முதுமலை புலிகள் காப்பக கக்கநல்லா பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சாலையோரம் உலா வந்தது.
இதனை அவ்வழியாகச் சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர், இந்த வீடியோ கட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.







