மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்து, தற்போது மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், தமிழநாடு சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
முன்னாள் பிரதமர், சமூகநீதிக் காவலர், இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகர், மறைந்த வி.பி.சிங் அவர்களுக்கு, இந்த திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் மகத்தான அறிவிப்பை இந்த மாமன்றத்தில் தங்கள் அனுமதியோடு 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.
வி.பி சிங் உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங், என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் விஸ்வநாத் பிரதாப் சிங். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனம் ஒட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். சர்வோதய சமாஜில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார்; தனது நிலங்களையே தானமாக வழங்கினார். 1969-ம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வென்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்; ஒன்றிய வர்த்தக அமைச்சர்; வெளியுறவுத் துறை அமைச்சர்; நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமரானார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும், அவரது சாதனைகள் மகத்தானவை.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சகோதரர் போல நினைத்தவர். தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் நிறைந்த இடமாக வி.பி.சிங் நினைத்தார். அவர் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, முன்னேற்றத்தில் மிகப்பெரிய அக்கறை கொண்டிருந்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதரின் நினைவை போற்றும் வகையில், சென்னையில் வி.பி.சிங்கின் முழு உருவ சிலை அமைக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா