இலங்கையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா இணைந்துள்ளார்.
இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. ஒரு தேநீர் ரூ.180, அரிசி ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர். இப்படியாக பொதுமக்களின் அன்றான வாழ்க்கையே நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டமும் தீவிரமடைந்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். எனினும், இலங்கையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கொழும்புவிலுள்ள இலங்கை அதிபர் மாளிகையை நோக்கி போராட்டக்காரர்கள் இன்று முன்னேறினர். அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலைகளில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல தடைகள் போடப்பட்டிருந்தன. அந்தத் தடைகளை எல்லாம் போராட்டக்காரர்கள் தகர்த்தெறிந்தனர்.
இந்த போராட்டக்காரர்களுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், முற்றுகை முடிந்தது. உங்கள் கோட்டை வீழ்ந்தது. அரகலயா மற்றும் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. இப்போதாவது ராஜினாமா செய்ய வேண்டும். நான் எப்போதும் இலங்கை மக்களுடன் நிற்கிறேன். விரைவில் வெற்றியை கொண்டாடுவோம். இது எந்த மீறலும் இல்லாமல் தொடர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.







