மதுபோதையில் தகராறு – மகனை அடித்துக் கொன்ற தாய்!

தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த தாய் காளியம்மாள் மண்வெட்டி கட்டையால் மகனின் தலையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள காவடிக்காரனூர் கிராமத்தில் வசிக்கும் 49 வயது முத்துச்சாமி, தினசரி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன், குறிப்பாக தனது தாய் காளியம்மாளுடன் (70) அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

முத்துச்சாமியின் இந்த போதையிலான வன்முறை, பல வருடங்களாக குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு, வழக்கம் போலவே முத்துச்சாமி மதுபோதையில் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். போதையில் மகன் பேசிய வார்த்தைகள், நீண்ட நாட்களாக மனதிற்குள் இருந்த கோபத்தை தூண்டியதால், ஆத்திரத்தின் உச்சியில் இருந்த காளியம்மாள், அருகில் கிடந்த மண்வெட்டி கட்டையால் மகனின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மகன் உயிரிழந்ததைக் கண்ட காளியம்மாள், அதிர்ச்சியில் உறைந்துபோய் தனது செயலுக்காக மிகவும் வருந்தினார். உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொங்கணாபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், காளியம்மாள் தனது மகனின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தச் செயலைச் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மகனின் மதுபோதை பழக்கம், ஒரு தாயை குற்றவாளியாக மாற்றிய சோகம், அப்பகுதி மக்களின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.