டெல்லியில் பிரதமர் மோடியின் வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆளில்லா விமானம் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் டெல்லியில் உள்ள 7 லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்குதான் தங்கி தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார். மோடி மாளிகையின் அதிகாரப்பூர்வ பெயர் பஞ்சவடி ஆகும். இந்த இல்லத்தில் 1984 ஆம் ஆண்டு வசித்த முதல் பிரதமர் ராஜீவ் காந்தி என்றும், 2014 ஆம் ஆண்டு முதல் இது பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமர் இல்லமாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் பிரதமர் மோடி இல்லம் அமைந்துள்ள டெல்லி பகுதியில் இன்று அதிகாலை திடீரென ஆளில்லா விமானம் என்று சொல்லபப்டும் டிரோன்கள் பறந்ததாக கூறப்படுகிறது . பிரதமர் நரேந்திர மோடி இல்லம் உள்ள பகுதியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து டிரோன் பறந்தது தொடர்பாக, பிரதமருக்கு பாதுகாப்பை வழங்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) காவல்துறையை அணுகி தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ட்ரோனைக் கண்காணிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், போலீசார் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளால் சந்தேகத்திற்குரிய வகையில் எதையும் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பிரதமரின் இல்லத்திற்கு அருகே, இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஆளில்லா விமானம் பறக்கவிடப்பட்டதாக பிரதமரின் சிறப்பு காவல் அதிகாரி, எங்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். இதனையடுத்து பிரதமர் இல்லத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் முழுமையான தேடுதல் வேட்டையை நடத்தினோம்.
ஆனால் இதுவரை சந்தேகத்திற்கிடமான வகையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையை (ATC) தொடர்பு கொண்டாலும், பிரதமர் இல்லத்திற்கு அருகில் பறக்கும் மாதிரியான பொருள் எதையும் அவர்களாலும் கண்டறிய முடியவில்லை. எனினும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணை நிறைவடைந்த பிறகே, முழு விவரம் தெரியவரும் ” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா