கணவரை இழந்த பெண் – தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கணவரின் இறப்புக் காப்பீட்டுத் தொகை கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 19.47 லட்சம் வழங்க வேண்டும் என்று  திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், எடையூர்…

கணவரின் இறப்புக் காப்பீட்டுத் தொகை கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 19.47 லட்சம் வழங்க வேண்டும் என்று  திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், எடையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் எடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். ஜெயக்குமார் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 15 லட்சத்திற்கான இறப்பு காப்பீடு செய்திருந்தால் அவர் இறந்த பின்னர் அவருடைய மனைவி தேன்மொழி ஸ்ரீராம் நிறுவனத்தில் காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், பொய்யான காரணங்களைக் கூறி காப்பீடு தராமல் ஸ்ரீராம் நிறுவனம் அவரது மனைவியைத் திருப்பி அனுப்பி உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மனைவி தேன்மொழி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் இறப்பு காப்பீடு கொடுக்காமல் ஏமாற்றிய ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு காப்பீட்டுத் தொகையான 18 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவு பத்தாயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 19 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சக்கரவர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.