நீதிமன்றம் உள்ளிட்ட எவ்வித கட்டுமானம் ஆனாலும் சுற்றுசூழல் அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறுவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்து ராமன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.119 கோடி மதிப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. 6 மாடியில் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகமாகும் வகையில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
பொதுப்பணித்துறையே இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த செயல் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். எனவே, சுற்றுசூழல் துறையின் முன் அனுமதியின்றி தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தை கட்டும் பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுசூழல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமலேயே மாவட்ட ஆட்சியர் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வரைபட அனுமதி உள்ளிட்ட எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது என குறிப்பிட்டார்.
அரசு தரப்பில், சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கட்டிடம் பொது நலன் சார்ந்தது. எனவே கட்டுமான பணிகளை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், நீதிமன்றம் உள்ளிட்ட எவ்வித கட்டுமானம் ஆனாலும் சுற்றுசூழல் அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறுவது அவசியம். எனவே, சுற்றுசூழல் துறையிடம் அனுமதி பெறும் வரை, தென்காசி மாவட்ட ஆட்சியர் கட்டுமான பணிகள் நடைபெற கூடாது. இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. 4 வாரரங்களில் உரிய அனுமதி பெற்ற பின் கட்டுமானப் பணிகளைத் தொடரலாம் என உத்தரவிட்டனர்.







