மெக்சிகோ நகரில் இருந்து யோசோன்டுவாவுக்குச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உட்பட 27 பேர் பலியாகியதாகவும், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மெக்சிகோ நகரத்திலிருந்து யோசோன்டுவாவுக்குச் சென்ற பேருந்து மாக்டலேனா பெனாஸ்கோ மாகாணத்தில் மலை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், நகர பணியாளர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை தனியார் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து விபத்து தொடர்பான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தை அகற்ற கிரேன்கள் கோரப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்கள் அந்த பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்து விபத்தில் முதலில் 25 பேர் பலியானதாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், பலத்த காயமடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு வயது கைக்குழந்தை உள்பட 27 பேர் பலியாகினர். அவர்களில் 13 பேர் பெண்கள், 13 பேர் ஆண்கள் என தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







