ஜூலை 14ம் தேதி மாமன்னன் மற்றும் மாவீரன் திரைப்படமும் தெலுங்கில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஜூன் 29 ம் தேதி வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம், பிரபலங்கள் மட்டுமின்றி, வெகுஜன மக்களின் விமர்சனத்தையும் நன்மதிப்பையும் பெற்று வருகிறது. முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் வடிவேலுவின் நடிப்பும், அவருக்கு எதிராக பஹத் பாசிலின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இது உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் என்பதாலும், இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியான நாள் முதல், திரையரங்குகளில் வசூலை வாரிக்குவித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சமூக அவலங்களை பிரதிபலிக்கும் மாரி செல்வராஜின் படங்களில் இதுவும் ஒரு மைல்கல் எனக் கூறுகிறார்கள்.
இதற்கிடையே, இப்படத்தை, தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட முடிவெடுத்துள்ளனர். மாமன்னன்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு, ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இதே ஜூலை 14ம் தேதியில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ”மாவீரடு” என்று தெலுங்கில் வெளியாக இருப்பதால் ஜூலை 14ம் தேதி மாமன்னன் மற்றும் மாவீரன் திரைப்படம் களம் காணவுள்ளது. இருதிரைப்படங்க்ஜளின் தெலுங்கு உரிமத்தினையும் ஏசியன் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.








