“பொதுமக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான். மாநில அரசுடையது அல்ல” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக அக்.6ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக அக்.9ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கீழநத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம், மேளதாளங்கள் முழங்க கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் குடிநீர் திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக குடிநீர் கிடைத்திடவும் பிரதமர் மோடி வழங்கும் திட்டங்கள் நேரடியாக கிடைத்திடவும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.
ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்த்து பேசுவது திமுகவின் வழக்கமாக உள்ளது. மத்திய அரசு திட்டத்தில் அவர்களுடைய போட்டோ ஒட்ட வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், மத்திய அரசின் திட்டத்தை லஞ்ச லாவண்யம் இன்றி பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் இருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான். மாநில அரசுடையது அல்ல. உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி படை பலம், பண பலத்தை தாண்டி நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தேர்தலுக்கு முன் சொன்னது ஒன்று தற்போது செய்வது வேறு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
நாம்தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வேட்புமனுக்களை நிராகரிக்க நிர்ப்பந்திக்கின்றனர். 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பை பொறுத்த வரையில் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.