உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மே மாதத்தில் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எனினும் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான வினாதாள் கசிந்ததாக தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் நீட் தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சோதனை, ஜாமர் உள்ளிட்ட கருவிகள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2017ல் நீட் தேர்வு வினாதாள்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








