புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
புதுச்சேரியில் காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெனிடிக் பிராஃன்சிஸ் (வயது 57). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். தற்போது பள்ளிகள் திறந்ததையடுத்து, காலையில் பள்ளிக்கு செல்லும் இவர்கள் மாலையில் தான் வீடு திரும்புகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் கணவன் – மனைவி இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அலமாரியில் வைத்திருந்த 45 பவுன் நகைகள் திருடு போயிருந்தன.
பின்னர் இது குறித்து காலாபட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். கணவன் -மனைவி இருவரும் ஆசிரியர்கள் என்பதை தெரிந்து கொண்டு, அவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்