ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கவர்ச்சிகர விளம்பரம் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் தொடர்புடைய 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். மொத்தம் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த மே 6-ஆம் தேதி ஆரணி சேவூர் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் கிளை ஒன்று திடீரென உருவாகியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாயாக தரப்படும் என்று விளம்பரம் வெளியானது. இதன்படி முதலீடு செய்தால், 3 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீட்டுத்தொகை திருப்பி தரப்படமாட்டாது என்றும், மாதாமாதம் ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை நம்பி முதல்நாளே 100க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்ததாகவும், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை வசூலானதாகவும் தெரிகிறது. விளம்பரத்தால் எழுந்த ஐயத்தின் காரணமாக சேவூர் கிளை அலுவலகத்திலும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 20 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் ரூ.3.41 கோடியை பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த நிறுவனத்துக்கு சீலும் வைத்தனர்.







