இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளுடன் கடந்த 27ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் அதிலிருந்து ஏழு மீனவர்களை கைது செய்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் அவர்களை இன்று வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்
இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இவர்கள் சிக்கினால், அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து இலங்கை நீதிமன்றம்விடுதலை செய்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் தற்போது இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2, 3 தினங்களில் அவர்கள் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் வந்த படகு குறித்த விசாரணை வரும் ஜனவரி மாதம் நீதிமன்றத்திற்கு வரும் என கூறப்பட்டுள்ளது.







