கேரளாவில் 22 வயது இளைஞர் ஒருவர், ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுரக்குளம் எஸ்டேட்டில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே தொழிலாளியாக வேலை பார்க்கும் தம்பதிக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருந்தனர். இந்த நிலையில் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட, அந்த ஆறு வயது சிறுமி தனது சகோதரனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், முடி வெட்டிக்கொள்வதற்காக சகோதரன் வெளியே சென்றுவிட சிறுமி மட்டுமே வீட்டில் தனியே இருந்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்த சகோதரன், வீட்டின் கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கே அந்த ஆறு வயது சிறுமி தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தாள். இதைப்பார்த்த சிறுவன் கதறி அழுதுள்ளார், சத்தம் கேட்டு வந்த பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். வீட்டிற்கு வந்த பெற்றோரும் உறவினர்களும் சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் 6 வயது சிறுமி தூக்கில் தொங்கியதை குறித்து காரணம் தெரியாமல் குழம்பித் தவித்துள்ளனர்.
பின்னர் சிறுமியின் மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வின் முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வண்டிப்பெரியார் காவல் நிலைய போலீசார் விரைவாக வழக்குப் பதிந்து விசாரணையை முடுக்கி விட்டனர். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தன.
சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அர்ஜுன் என்ற 22 வயது இளைஞன் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் அர்ஜூன் கடந்த சில மாதங்களாகவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று, சிறுமி அவரது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு அங்கே சென்ற அர்ஜூன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமி சத்தம் போடாமல் இருக்க வாயை பொத்தியதால் சிறுமி மயக்கமடைந்திருக்கிறாள்.
இந்நிலையில் சிறுமி இறந்துவிட்டதாக நினைத்த அர்ஜூன் சிறுமியின் கழுத்தில் கயிறு கட்டி தொங்கவிட்டுச் சென்றுள்ளான். இதில் சிறுமி துடிதுடித்து உயிரிழந்திருக்கிறாள். விசாரணைக்குப் பின்னர் அர்ஜூனை கைது செய்த போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.







