தமிழ் நாட்டைச் சேர்ந்த புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இன்று பதவியேற்பு!

தமிழகத்தை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள்பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி. வில்சன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து, அவர்களுக்கு மாநிலங்களவையில் நேற்று பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அன்புமணி மட்டும் கலந்து கொள்ளவில்லை. நிகழ்வில் வைகோ உள்ளிட்ட ஓய்வு பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தங்கள் அனுபவங்கள் குறித்து உரையாற்றினர். மேலும், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் , ”அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்த்த வைகோ ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 1978, 1984, 1990 என 3 முறை இந்த அவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், இந்த அவைக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளார். வைகோ உட்பட 6 எம்பிக்களும் மாநிலங்களவைக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஓய்வு பெறும் எம்.பி.களுக்குபிற எம்.பி.க்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பதவி நிறைவடைந்த 6 எம்பிக்களில் திமுகவை சேர்ந்த வில்சன் மீண்டும் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து திமுகவை சேர்ந்த கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிக்களும் மாநிலங்களவையில் இன்று பதவியேற்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.