திண்டுக்கல் அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட 5ம் வகுப்பு மாணவியின் உடலை, நீண்ட போராட்டத்திற்கு பின்னர், சிறுமியின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
திண்டுக்கல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, அரசு நடுநிலைப்பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல், பள்ளிக்கு சென்ற சிறுமி, பள்ளியின் பின்புறம் முட்புதரில் உடல்கருகிய நிலையில், சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சிறுமியின் உடலை ஒப்படைத்தபோது, இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், உடலை வாங்கவும் மறுத்தனர்.
இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் மாணவி தரப்பு கோரிக்கையை ஏற்று, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட சிறுமியின் உடலை, அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தகனம் செய்ய மின் மயானத்திற்கு, சிறுமியின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது.







