பொங்கல் பரிசாக தொகுப்பு பொருட்களுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் மற்றும் பச்சரிசி, வெல்லம் அல்லது சர்க்கரை, கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், புதுச்சேரி அரசு பொங்கல் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 2023 ம் ஆண்டு பொருட்களுக்கு பதிலாக ரூ. 470 குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்தாண்டும் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரூ. 500 குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.