நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சார்ந்த ராஜரத்தினம் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்தவர் மரியதாசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று, கிறிஸ்டி வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் மரியதாஸ் வள்ளியூர் அருகே உள்ள கோவனேரி கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றுவிட்டார். இதனிடையே வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘சென்னை மாநகராட்சி; ஒரு பள்ளியில் மட்டுமே 100% தேர்ச்சி’
உள்ளே சென்ற கொள்ளையர்கள், வீட்டிலிருந்த 50 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் மரியதாசன் தோட்ட வேலையை முடித்து விட்டு, மாலை 3 மணி அளவில் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே சென்ற மரியதாசன், பீரோ மற்றும் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பீரோவைச் சென்று பார்த்த போது, அதிலிருந்த 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அங்கு வந்த வள்ளியூர் ஏ.எஸ்.பி சமய்சிங் மீனா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








