நேஷன் ஹெரால்டு பணமோசடி வழக்கில் 4 நாட்களில் 40 மணிநேரம் வரை அமலாக்கத்துறையினர் ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
2012-ஆம் ஆண்டில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை யங் இந்தியா நிறுவனத்தின் மூலம் முறைகேடாக கையகப்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார்.
2019-ஆம் ஆண்டு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 புள்ளி 38 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் விசாரணையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ராகுல் காந்தியிடம் கடந்த வாரம் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை தொடர்ந்து 3 நாட்கள் விசாரணையை மேற்கொண்டது. இதனையடுத்து 4வது நாளாக ஆஜராக சொன்னபோது, தாயார் சோனியாக காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவருடன் இருக்க வேண்டும் என ராகுல் தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்து ஜூன் 17ல் ஆஜராக இருந்த ராகுலுக்கு ஜூன் 20ல் ஆஜராக அனுமதியளித்தது.
இதனையடுத்து நேற்று காலை 11.05க்கு டெல்லி ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ராகுல் ஆஜரானார். இதனையடுத்து அவர் நள்ளிரவு 12.30 மணிக்கு அவர் அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.
இதுவரை அமலாக்கத்துறை 4 நாட்களில் சுமார் 40 மணி நேரம் ராகுலிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து இன்றும் (ஜூன் 21) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









