கர்நாடகாவில் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஐ போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஐ போன் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனம் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 3000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நேற்று இரவு பணிக்கு வந்த 2000 ஊழியர்கள் பணி முடிந்த பின்னர் இன்று காலை ஊதியம் வழங்கக் கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால் அனைவரையும் பணி நீக்கம் செய்து விடுவதாக என விஸ்ட்ரான் நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த டிவி, கணினி, உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தினர். மேலும் விஸ்ட்ரான் நிறுவனத்தின் வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன் தீயிட்டும் கொளுத்தினர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோலார் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு உள்ளனர்.
ஐ போன் உதிரி பாகம் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனம் அவர்களது நிறுவனத்தை பெங்களூரில் விரிவாக்கம் செய்து 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்து இருந்த நிலையில் ஏற்கெனவே பணியில் இருக்கும் ஊழியர்களுக்கே கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.







