காஞ்சிபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் சுமார் சவரன் நகை மற்றும் ரூ.19 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பகுதியில் பிரபல தொழிலதிபுரான கணபதி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தன் தாயாரின் ஈம சடங்கு வைபவத்திற்காக ராமேஸ்வரத்திற்கு சென்றார். நேற்று மாலை தனது இல்லத்திற்கு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார். பின்புறமாக சென்று பார்த்த பொழுது பின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே மூன்று பீரோக்களில் வைத்திருந்த சுமார் 300 சவரன் தங்க நகைகளும் சுமார் 19 லட்ச ரூபாய் ரொக்க பணமும் கொள்ளைக்கு போனது கண்டு அதிர்ச்சியுற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியுற்ற கணபதி டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு தனிப்பட்ட முறையில் தகவல் அளித்தார்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை கணபதியின் வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேனம்பாக்கம்-வில்லிவலம் அருகே உள்ள பாலாற்றில் இரண்டு பெரிய பள்ளங்களை தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதை இன்று விடியற்காலையில் தோண்டி எடுத்துக்கொண்டு காலிப் பெட்டிகளை மட்டும் போட்டு விட்டு சென்றதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்தில் தாலுகா காவல் ஆய்வாளர் பிரேம், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.