ராமேஸ்வரத்தில் மீனவர் வலையில் சிக்கிய 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.
ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஜனதன் என்பவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது வலையில் 30 கிலோ எடை கொண்ட கஞ்சா சிக்கியுள்ளது. இதையடுத்து, மீனவர் ஜனதன் அவரது வலையில் சிக்கிய கஞ்சாவை வீட்டிற்கு கொண்டு வந்து ஈரம் இல்லாமல் வெயிலில் உலர வைத்து விற்பனையில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஐஜி ஸ்பெஷல் குற்றத் தடுப்பு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்து ராமேஸ்வரம் துறைமுக போலீஸாரின் உதவியுடன் விரைந்து சென்று விற்பனைக்காக உலர்த்தி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, ஜனதனை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும், இந்த கஞ்சா கடலில் இருந்து கொண்டு வந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 7 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-ம.பவித்ரா








