விளம்பர பலகைகள், பதாகைகள் வைப்பதில் விதிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டப்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உரிமம் பெறாமல் விளம்பர பலகைகள், பதாகைகள் ஆகியவை நிறுவப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பர பலகைகள், உரிமக் காலம் முடிந்த பின்பும் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் ஆகியவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விளம்பர பலகைகளை அகற்றத் தவறினால் உள்ளாட்சி அமைப்புகளே அவற்றை அகற்றி, அதற்கான செலவினத் தொகை, அந்தந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனம், தனிநபர், கட்டட உரிமையாளர் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, 25 ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.உரிய அனுமதியின்றி பதாகைகள் வைக்கும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையோ, 5 ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை எச்சரித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








