3 நாள் தொடர் விடுமுறை; உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தும் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகள் எடுத்து மகிழ்ந்தனர். சர்வதேச சுற்றுலா தலங்களில்…

தொடர் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தும் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகள் எடுத்து மகிழ்ந்தனர்.

சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா
தலங்களை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு
வருகை புரிவது வழக்கம்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடர் விடுமுறையையொட்டி இன்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்தனர்.

இந்நிலையில் உதகையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் இன்று மழையின் தாக்கம் குறைந்து இதமான வெயிலின் தாக்கம் காணப்பட்டதால் பூங்காவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் புதுமண தம்பதிகள் பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு மலர்களை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகள் எடுத்தும் புல்வெளி மைதானங்களில் ஓய்வு எடுத்தும் மகிழ்ந்தனர்.

மேலும் உதகையில் நிலவும் இதமான கால நிலையை புதுமண தம்பதிகள் அனுபவித்தும்
மகிழ்ந்தனர். இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் நிலவி
வரும் இதமான காலநிலையை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனுபவித்து
பூங்காவினை கண்டு ரசிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.