இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தாவில் நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் கடந்த 10ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கியது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி விராட்கோலியின் சதம் மற்றும் சுப்மான் கில், ரோகித் சர்மா ஆகியோரது அரை சதத்தால் 373 ரன்கள் குவித்தனர்.
பந்துவீச்சில் தொடக்கத்தில் மிரட்டிய இந்திய பவுலர்கள் கடைசி கட்டத்தில் கோட்டை விட்டனர். இதனால் தான் இலங்கை அணியால் 300 ரன்களை கடக்க முடிந்தது. எனவே பந்துவீச்சில் கூடுதல் கவனம் அவசியமாகும். சாதனையின் விளிம்பில் இருக்கும் விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் ஒரு அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். முதல் ஆட்டத்தில் கேப்டன் தசுன் ஷனகாவின் அதிரடியான செஞ்சுரியும், பதும் நிசாங்காவின் 72 ரன் சேர்ப்பும் இலங்கைக்கு ஆறுதல் தந்தது. பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும் கச்சிதமாக செயல்பட்டால் இதை விட பலமாக இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.