சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி. தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர்களிடமிருந்து, தன் தாய் நிலத்தின் உரிமைகளைக் காத்திட, மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படிப்பட்ட ஒரு ஆகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 17-ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள், மா.சுப்ரமணியன், செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், சக்கரபாணி, பொன்முடி ஆகியோர் தீரன் சின்னமலையின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இவர்களை தொடர்ந்து எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் தீரன் சின்னமலை படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் சின்னமலையின் சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியைச் சார்ந்த 500- க்கும் மேற்பட்டோர் கையில் கொடிகளை ஏந்தியபடி சென்னை கிண்டியில் திரளாக கூடியிருந்தனர். மேலும் சென்னை, கிண்டி திருவிக தொழிற்பேட்டை பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம் என்பதால், அந்த பகுதி முழுவதும் 200- க்கும் மேற்பட்ட போலீசார் பாரிகாடுகள் அமைத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா