சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பதாக, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களில், துணை ராணுவம், மத்திய காவல் படை, தமிழக காவல்துறை மற்றும் மாநகர ஆயுதப்படை, என இரண்டாயிரத்திற்கும் அதிகமான காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். மேலும், சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.







