புதுச்சேரி கடற்கரையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர்.
இந்தியாவில் உருவான பாரம்பரிய கலையான யோகா உடல் , மனம் மற்றும் ஆன்மீகப்
பயிற்சியாகும். இதை பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் தனது ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையில் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21ஆம் தேதி கொண்டாட வேண்டும் என பரிந்துரைத்தார்.
அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் 2 கி.மீ. தூரத்தில் 8வது சர்வதேச யோகா தினவிழாவை கோலாகலமாக நடத்தியது.
இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்று பல்வேறு வகையான யோகாசனங்களையும் செய்து காட்டினர். விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி யோகாசனம் செய்யாமல் மேடையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சியை முழுவதுமாக பார்வையிட்டார்.
யோகா தினத்தையொட்டி புதுச்சேரியை பொருத்தவரை சுற்றுலாத் தலங்கள் உள்ளடக்கிய 75 முக்கிய இடங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகாசனம் பயிற்சியை மேற்கொண்டனர்.
-மணிகண்டன்








