தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக ஈடுபடுவதில்லை. குடும்பத்தினரே அதை கவனித்து வருகின்றனர்.
ஜூன் 14ஆம் தேதி விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்குப் பின் நலமுடன் இருப்பதாகவும் இன்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
-ம.பவித்ரா







