நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே 4-ந்தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு தொடர்ந்ததால் அந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.
இதைப்போல நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற தொழில்முறை கல்விக்கான நுழைவுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக, அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
இதையடுத்து 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.







