நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்த நோயாளிகள் ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 56,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 271 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த திங்கள் கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 31,643 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் இறப்பின் சதவிகிதமும் அதிகரித்தது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் ஒரே படுக்கையை இரண்டு பேர் பகிர்ந்துகொண்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகியது. ஆனால் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் , இதுபோல ஒரு நிலை ஏற்படவில்லை என்றும் நோயாளிகளுக்கான படுக்கைகளின் பற்றாக்குறை முன்பு இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.
நாக்பூரில் மட்டும் 3,100 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திங்கள் கிழமை நிலவரப்படி 55 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது பொதுமக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.







