விழுப்புரம் கிராம ஊராட்சிகளில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட கூடாதென ஒலிப்பெருக்கி மூலம் சேந்தனூர் ஊராட்சி மன்ற தலைவி சுதா வீதிவீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்த்தனர். இவர்களில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் விஷ சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கிராம ஊராட்சிகளில் ஒலி பெருக்கி மூலம் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட கூடாதென அறிவுறுத்துமாறு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின் பேரில் சேந்தனூர் ஊராட்சி மன்ற தலைவி சுதா ஒலிப்பெருக்கி மூலம் சாராயம் விற்பனை செய்ய கூடாது என வீதிவீதியாக பிரச்சாரம் செய்தார். மேலும் அவ்வாறு விற்பனை செய்பவர்கள் உடனடியாக காவல் துறையினர் மூலம் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.







