”ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” – நியூஸ்7 தமிழுக்கு ஓபிஎஸ் பிரத்யேக பேட்டி

”ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என நியூஸ்7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்  ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும்…

”ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என நியூஸ்7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்  ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது.

விரிவாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.  இந்த  வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். கோடை விடுமுறை வரும் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ள நிலையில் இன்று ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோஹி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பினை வாசித்தது.

தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..” இந்த விவகாரத்தில் எங்களுக்கு அனுப்பப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதை நாங்கள் ஏற்கிறோம.  ஜல்லிக்கட்டு தொடர்பாக எங்களுக்கு கொடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.

ஜல்லிக்கட்டு பாரம்பரியம், கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்தது. இது  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றினைந்தது  என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை  நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு சட்டம் காளைகளுக்கு ஏற்படும் கொடுமையை பெரும்பான்மையாக குறைத்துள்ளது. கலாச்சாரம் என்ற வகையில் இருந்தாலும் கூட அதில் துன்புறுத்தல் என்று வரும் பொழுது அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை,  தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன”  என உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது…

“ ஜல்லிக்கட்டு பிரச்சினையைப் பொறுத்தவரையில் அடிப்படை உரிமையை கொண்டுவந்தது அதிமுக ஆட்சிதான்; ஜல்லிக்கட்டுக்கு விதிக்கபட்ட தடையை நீக்கக் கோரி பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து நான்  வலியுறுத்தியதன் பேரில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தது;

தற்போது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனம் வழங்கிய தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.