10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இருப்பதால், 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு, வழங்கப்பட்டது எனவும், இதனை ரத்து செய்ததற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் தற்போது எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என தெரிவித்த நீதிபதிகள், 10.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவான மனுதாரர் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் மனுதாரர் தரப்பில் அனைத்து கருத்துகளையும், எழுத்துப்பூர்வ வாதங்களையும் தொகுத்து வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாதங்களின் தொகுப்பை பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும், வழக்கு விசரணை மீண்டும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அடுத்த உத்தரவு வரும் வரை 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் எந்த மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.