வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு சம்மந்தமான அறவழி போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியிடமும் இதுவரை பா.ம.க பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்தார். வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட வன்னியர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொகுப்பு இட
ஒதுக்கீடு முறை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அது போல் தமிழகத்திலும் தொகுப்பு இட ஒதுக்கீடு முறை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ஆணையம் அமைத்து 6 மாதம் கால அவகாசம் அளித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், ஏற்கனவே உள்ள கமிஷன்கள் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அ.தி.மு.க அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட்டணி தொடர்பான முடிவை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் ஜி.கே. மணி கூறினார்.







