பொதுமக்களின் அனுமதியை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் குப்பைகள் குவியத் தொடங்கியுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கடைகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அனுமதியை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் குப்பைகள் குவியத் தொடங்கியுள்ளன. வழக்கத்திற்கு மாறாக தற்போது முகக்கவசம் போன்ற மருத்துவ கழிவுகளும் ஆங்காங்கே கிடப்பது, தூய்மை பணியாளர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முகக்கவசங்கள் அதிகம் இருப்பதால் அவற்றை அகற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்களை முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.







