மலேசியாவில் உயிரிழந்த தமிழரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 29 மேலநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்
கூலி தொழிலாளி வீரமணி. இவரது மனைவி பானுமதி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்தின் வறுமை சூழல் காரணமாக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னால் மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார் வீரமணி. அங்குள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
வீரமணி நேற்று மாரடைப்பால் உயிரிழந்ததாக 29 மேலநெம்மேலி கிராமத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைக் கேட்டு வீரமணியின் மனைவி பானுமதி உள்ளிட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடும்பத்தின் வறுமை சூழலால் கணவர் வெளிநாட்டில் வேலை செய்த போதும் மூத்த மகனான விஜயேந்திரனின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் மலேசிய நாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்து வர திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் உதவி செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







