இந்தோ- ஜப்பான் Samwad மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளில் மனிதநேயத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். மற்றொருவரை கீழே தள்ளி விட்டு முன்னேறி செல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து வளர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் பாரம்பரிய புத்த இலக்கியங்கள் மற்றும் வேதங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்காக நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புத்த மதத்தின் சிறந்த இலக்கியங்கள், பல்வேறு உலக நாடுகளில் உள்ள மடங்களில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய உலகில் பல சிக்கல்களை எதிர்கொள்ள புத்தரின் போதனைகள் உதவும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைத்து நூல்களையும் டிஜிட்டலில் மாற்றி, அனைவருக்கும் உதவும் வகையில் கொடுக்க வேண்டும், புத்த துறவிகளுக்காக அவரவர் மொழிகளில் இந்த நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.







