புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து, அரசு பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோப்பினை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை வரும் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும், என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவர் காங்கிரசார், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை மீறி உள்ளே செல்ல மாணவர்கள் முயன்றதால், மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.







