தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் எலிகள் தொல்லையால் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைப்பெற்று செல்கின்றனர்.
மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனவும், மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் பணம் வாங்குவதாகவும், கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக நோயாளிகள் மத்தியில் பல்வேறு குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பிரசவ வார்டு தனியாக உள்ளது. இந்த பிரசவ வார்டில் உள்ளூர் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தனி வார்டில் தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளை தங்க வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். பிரசவவார்டில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால் அங்கு அதிகளவிலான எலிகள் உள்ளது.எலிகள் பிரசவ வார்டில் அங்கும் இங்கும் ஓடி சென்று நோயாளிகள் பையில் வைத்துள்ள உணவு பொருட்களை சேதப்படுத்துவதும், தூங்கி இருக்கும் நோயாளிகளின் கால்களை கடிப்பதும் என எலிகள் தொல்லையால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
மேலும் பிறந்த பச்சிளங்குழந்தைகளை எலிகள் கடித்து விடுமோ என அச்சத்தில் பெற்றோர் இரவு முழுவதும் கண்விழித்து குழந்தைகளை எலிகளிடமிருந்து பாதுக்காக்கும் நிலை உள்ளது. எனவே தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் உள்ள எலிகளை பிடிக்க மருத்துவனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.







