கும்பகோணம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ் ஆர் ராதாவின் உடல், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, வீட்டு வசதித்துறை அமைச்சராகவும், ஜெயலலிதா கட்சித் தலைமை பொறுப்பை ஏற்றபோது, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் எஸ்.ஆர்.ராதா. கடந்த 6-ம் தேதி, உடல் நலக்குறைவால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் அவரது சொந்த ஊரான கும்பகோணம் துவரங்குறிச்சி தெருவில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.







