தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவுக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி இதற்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக முத்துக்குமார், ராம்குமார் ஆதித்யன் ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த முறையீட்டை முன்வைத்தனர்.







