கொரோனா காலத்தில் மக்களுக்குப் பல உதவிகள் செய்த சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அவரது புகைப்படத்தைப் பதித்து நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஊரடங்குக் காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப வாகனங்கள் அமைத்துத் தொழிலாளர்களுக்கு உதவினார். மேலும் பொருளாதார ரீதியாக அவதிப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். இன்னும் பல உதவிகளை மக்களுக்குச் செய்தவர் இந்தி நடிகரான சோனு சூட். திரைப்படங்களில் வில்லனாகவே நடித்த இவர் நிஜ வாழ்வில் மக்களிடையே ஹீரோவாகத் திகழ்ந்து வருகிறார்.
சோனு சூட் செய்த அனைத்து உதவிகளுக்கும் பாராட்டும் வண்ணம் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தங்களது போயிங் 737 ரக விமானத்தில் அவரது புகைப்படத்தைப் பதித்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
“இப்பாராட்டுகள் அனைத்தையும் கண்டு நான் நெகிழ்ச்சி அடைகிறேன். இது ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மிகவும் இனிமையான செயல். இதுபோன்ற ஒரு அழகான பரிசைக்கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கொரோனவின்போது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல இந்தியர்களைப் பாதுகாப்பாக தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.







