ஓசூரில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 18 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் சாலையில் உள்ள தனியார் நகைகடன் நிதி நிறுவனத்தில் நேற்று காலை மர்ம நபர்கள் 6 பேர் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஐஜி பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்காதர் ஆகியோர் நேரில் விசாரணை செய்து குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டனர். கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிகாலை 4 மணி அளவில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கைத்துப்பாக்கிகள் 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 6 கொள்ளையர்களும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பின்னர் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.







