கொடாக் வெல்த் மற்றும் ஹூரன் இந்தியா இணைந்து இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் இந்தாண்டு ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.54,850 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
யார் இந்த ரோஷினி நாடார்?
இந்தியாவில் முன்னணி ஐடி தொழில்நுட்ப நிறுவனமாகவும் நாட்டின் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனமாகவும் (HCL) இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த சிவ் நாடார் கடந்த ஜூலை மாதம் விலகியதையடுத்து அவரின் மகள் ரோஷ்னி நாடார் பொறுப்பேற்றுக் கொண்டார். 38 வயதாகும் ரோஷ்னி நாடார் டெல்லியிலேயே பிறந்து, வளர்ந்தவர்.
அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அதோடு கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரியில் நிர்வாகவியல் மேற்படிப்பு படித்துள்ளார். முன்னதாக இவர் HCL நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்துள்ளார்.
இந்தியாவின் 3வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான HCL நிறுவனத்தின் இயக்குனர்களுள் ஒருவராக 2013ம் ஆண்டு ரோஷ்னி நாடார் நியமிக்கப்பட்டார்.
மேலும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் 2017 முதல் 2019 வரை இடம்பிடித்திருந்தார். இவர் தற்போது ரூ.54,850 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார பெண்மணியாகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







