அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்த சசிகலா, ஒற்றுமையாக இணைந்து செயல்படவேண்டும் என்பதே தனது எண்ணம் எனவும் கூறியுள்ளார்.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் ஓசூர், கிருஷ்ணகிரியில் வழிநெடுக திரண்டிருந்த அமமுகவினர் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதை போன்று தனக்கு பின்னாலும் அதிமுக இன்னும் 100 ஆண்டுகள் தழைத்தோங்கி இருக்க வேண்டும் என்பதற்காக, எஞ்சியிருக்கும் தனது வாழ்நாளை கழக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பேன் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக பல முறை சோதனைகளை சந்தித்தபோதும், பீனிக்ஸ் பறவையாக மீண்டு எழுந்துள்ளது. பொது எதிரியை ஆட்சிக்கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை காத்திடுவதே நமது கடமை எனவும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக இயக்கம், சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்து விடக்கூடாது. தன் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை அதிமுக இயக்கத்திற்காக உழைத்திடுவேன் எனவும் சூளுரைத்தார். அன்புக்கு நான் அடிமை என்ற எம்ஜிஆர் பாடலை சுட்டிக்காடிய அவர், அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன் எனவும் சசிகலா தெரிவித்தார்.