யூடியூபர் மதனின் மனைவியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
யூ- டியூப்பில் ஆபாசமாக பேசி வருவதாக எழுந்த புகார்களின் கீழ் மதன் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே புளியந்தோப்பு காவல் நிலையத்தில் யூடியூபர் மதன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, மூன்று தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதன் நடத்தும் யூடியூப் சேனலின் நிர்வாகி கிருத்திகா என்பதால் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







