சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே விளையாட்டு திடல் வேண்டி பலமுறை மனு கொடுத்தும் செவி சாய்க்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளைஞர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் பகுதியில் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் சூராத்தம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த தரிசு நிலத்தில் கைப்பந்து, கால்பந்து, மட்டும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அந்த தரிசு நிலம் 15 ஏக்கரை சூரத் அம்மன் கோயிலின் பேரில் பட்டா வாங்கியுள்ளதால், அப்பகுதியில் மரங்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் தங்கள் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விளையாட்டுத் திடலுக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்த அவர்கள் 12 மணி வரை ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படாததால் ஆத்திரம் அடைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இச்சம்பவம் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் மனுவை பெற்றுக் கொண்டு, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த பின் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.